உரிய காலத்தில் கட்டணம் செலுத்தாமையினால், 13 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு: அமைச்சர் கஞ்சன
உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாததால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் தாமதமாக செலுத்தப்பட்டதன் காரணமாக 2022 மற்றும் 2024இற்கு இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 30 மில்லியன் சிவப்பு மின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க – நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், “உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாததால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், 126,000இற்கும் மேற்பட்ட நுகர்வோரின் கணக்குகள் மூடப்பட்டுள்ளதோடு, கிட்டத்தட்ட 1.9 மில்லியன் புதிய மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன.
எனினும், இலங்கையில் தற்போது 7.2 மில்லியனுக்கும் அதிகமான மின்சார பாவனையாளர்கள் இருக்கின்றனர்” எனவும், அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.