மதுக்கடைகளைத் திறப்பது பொருத்தமானதல்ல: சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர்

🕔 September 18, 2021

கொவிட் நிலைமையின் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மதுபானசாலைகள் திறக்கப்படுகின்றமை பொருத்தமான விடயமல்ல என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுபானசாலைகளை மாத்திரம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்குமாயின் அது தற்போது முன்னெடுக்கப்பட வேண்டிய பொருத்தமான செயற்பாடல்ல. சுகாதார அமைச்சினால் இது குறித்து எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.

சுகாதார அமைச்சு மாத்திரமல்ல. வேறு யார் இதற்கு அனுமதி வழங்கினாலும் மக்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதன் மூலம் கொவிட் பரவலுக்கான சந்தர்ப்பங்கள் அதிகமுள்ளன.

எனவே உரிய அதிகாரிகள் இது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். இது போன்றதொரு நிலைமை மீண்டுமொரு முறை ஏற்பட சந்தர்ப்பமளிக்கக் கூடாது” என்றார்.

தொடர்பான செய்தி: மதுக்கடைகளை நோக்கி படையெடுக்கும் ‘குடிமக்கள்’: அர்த்தமற்றுப் போகும் ஊரடங்குச் சட்டம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்