மதுக்கடைகளை நோக்கி படையெடுக்கும் ‘குடிமக்கள்’: அர்த்தமற்றுப் போகும் ஊரடங்குச் சட்டம்
– நூருல் ஹுதா உமர் –
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை ஒக்டோபர் 01ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசு அறிவித்து விட்டு, மதுபான கடைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதால், நாட்டில் முரண்பாடானதொரு நிலை தோன்றியுள்ளது.
ஊரடங்கு அமுலில் உள்ளபோதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என நேற்று (17) அரசு அறிவித்தது.
இதனையடுத்து மதுக்கடைகளை நோக்கி கணிசமானோர் படையெடுப்பதைக் காண முடிகிறது.
இதனால் ஊரடங்கு என்பதற்கு அர்த்தமில்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகளை நோக்கி படையெடுக்கும் ‘குடிமக்களை’ எதுவும் செய்ய முடியாமல், பாதுகாப்புப்படையினர் பார்த்துக் கொண்டிருந்தமையினையும் அம்பாறை மாவட்டத்தில் அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில் இலங்கையில் என்ன நடக்கிறது என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
அத்தியாவசிய உணவு பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் பல சரக்குக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையிலேயே, மதுபான கடைகள் அனைத்தும் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மதுக்கடைகளுக்கு வருவோர் ஒழுங்கான முறையில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை கொள்வனவு செய்கின்றனர்.