உலக வங்கியிடமிருந்து 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அரசாங்கம் பேச்சுவார்த்தை
உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணய பெறுமதியில் சுமார் 10007 கோடி ரூபாவாகும்) கடனாகக் கோரியுள்ளதாக திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் வீதிகளை அமைப்பதற்காகவும் விவசாயத் திட்டங்களை மேற்கொள்வதற்காகவும் இந்தக் கடன் கோரப்பட்டுள்ளது.
3000 கிலோமீட்டர் வீதிகளை அமைப்பதற்கு 450 மில்லியன் டொலர்களையும், விவசாய திட்டங்களுக்கான களஞ்சியசாலைகள் மற்றும் சேகரிப்பு மையங்களை நிர்மாணிப்பதற்காக 50 மில்லியன் டொலர்களையும் கடனாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்தக் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பமாகும் என்றும், 2049ஆம் ஆண்டு கடன் செலுத்தி முடிக்கப்படும் எனவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.