அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஆபத்தானது; சட்டத்தைக் கூட ஜனாதிபதி உருவாக்கலாம் சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை

🕔 September 1, 2021

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவையை உரிய வகையில் முன்னெடுப்பதற்காக எனத் தெரிவித்து, நேற்று முன்தினம் இரவு அவசர கால நிலைமையினைப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியானது.

இந்த நிலையில்; “அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையினால் நாட்டில் முற்றுமுழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடக்கும் என்றும் ஜனாதிபதி தான் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும் எனவும் சட்டவாக்கமும் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றடையும் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் ட்விட்டரில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டில் அவசரகால நிலைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் உணவு விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு இது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நாடு ஆபத்திலிருந்தால் மட்டுமே இந்தச் சட்டத்தை பயன்படுத்த முடியும். இதனால்தான் பொதுமக்கள் பொது சுகாதார அவசரகாலச் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினோம்.

அதுதொடர்பில் தனிநபர் சட்டவரைவு ஒன்றையும் நான் நாடாளுமன்றில் முன்வைத்துள்ளேன். அதனை விவாதத்துக்கு எடுத்து நிறைவேற்றுவதாக அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

அவ்வாறிருக்கையில் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற தோரணையிலே தற்போது அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இதன் ஆபத்து என்னவென்றால், இதனைத் தொடர்ந்து முற்றுமுழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடக்கும். ஜனாதிபதி – தான் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும்.

சட்டவாக்கமும் ஜனாதிபதியின் கைகளுக்குச் சென்றடையும். இதனை நாம் வலுவாகக் கண்டிக்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்