அரசுக்குச் சொந்தமான 5533 வாகனங்கள் இயங்கு நிலையில் இல்லை: அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிப்பு

🕔 August 24, 2021

மைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், அரச வணிக நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 82,194 வாகனங்கள் உள்ளன என்று, அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தொடர்பான அறிக்கையொன்றினை பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சர் எனும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையிலேயே மேலுள்ள தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி 82,194 வாகனங்களில் 76,661 வாகனங்கள் நடப்பில் இயங்குவதுடன், 5533 வாகனங்கள் இயங்கு நிலையற்றதாகக் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயங்கு நிலையிலுள்ள வாகனங்களில் 33,931 வாகனங்கள் அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களிடமும், அரச வணிக நிறுவனங்களிடம் 26,395 வாகனங்களும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிடம் 16,335 வாகனங்களும் உள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச நிறுவனங்களிலுள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் 8,500 பேருக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டு, அவர்களின் பிரத்தியேக மோட்டார் வாகனங்களுக்கு உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொள்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி தகவல்களைக் கருத்தில் கொண்டு, தற்போது இயங்கு நிலையில் அல்லாத வாகனங்களில் திருத்தம் செய்யக்கூடிய வாகனங்களைத் துரிதமாக திருத்தம் செய்து பாவனைக்குட்படுத்தவும், திருத்தம் செய்ய முடியாத வாகனங்களை முறையான பெறுகைக் கோரலை பின்பற்றி தாமதிக்காமல் அகற்றுவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்