கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல்: ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

🕔 August 5, 2021

டும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல் குறித்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த – கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் 24ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் உத்தரவு அமுல்படுத்தப்படுவதனை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு ஊடகவியலாளர்கள் சிலரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்தது. நீதியரசர்கள் மர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட மற்றும் அசல வெங்கப்புலி ஆகிய மூவர் அடங்கிய குழாம் இந்த மனுவை பரிசீலனை செய்தது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து, ஊடகவியலாளர்களான லக்னாத் ஜயகொடி, காவிந்தியா கிறிஸ்டோபர் தோமஸ் உள்ளிட்டவர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

1979ம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக, கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்டெடுத்தல் என்ற பெயரில் ஓர் உப பிரிவு உருவாக்கப்பட்டது.

இந்த உப பிரிவின் ஊடாக நாட்டின் எந்தவொரு பிரஜையையும் நீதிமன்ற செயற்பாடுகள் இன்றி கைது செய்து தடுத்து வைக்கப்பட முடியும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவு தனிப்பட்ட நபர்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசியல் அமைப்பின் பல்வேறு சரத்துக்களை நேரடியாக மீறும் வகையிலானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், ஜனாதிபதியின் உத்தரவினை அமுல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்