கடற்கரையிலிருந்து 65 மீட்டருக்கு உட்பட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு, கல்முனை மாநகர சபை உத்தரவு
![](https://puthithu.com/wp-content/uploads/2020/11/KMC-011.jpg)
– அஸ்லம் எஸ்.மௌலானா –
பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி தொடக்கம் பெரிய நீலாவணை வீ.சி. வீதிக்கப்பால் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம் வரையான 65 மீட்டருக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசம் முழுவதும் கல்முனை மாநகர சபைக்கு உரித்தாக்கப்பட்டிருப்பதால், இப்பகுதியிலுள்ள கட்டுமானங்கள் யாவும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று மாநகர சபை உத்தரவிட்டுள்ளது.
இவற்றை அகற்றத் தவறும் நபர்களுக்கு எதிராக நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கரையோரம் பேணல் திணைக்களம் என்பவற்றின் சட்ட விதிகளின் கீழ் – சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என மாநகர சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இக்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுவோர் நீதவான் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்ய முடியாது எனவும், அவர்கள் மேல் நீதிமன்றத்திலேயே பிணை கோர முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.