தலைப்புச் செய்திகள்

கொரோனாவினால் மேலும் 05 பேர் பலி: மரணப் பட்டியல் 29 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்றினால் அவரது ஈரல் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 29 பேர் கொரோனா மரணங்கள் ஏற்பட்டமை உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.