நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்: நளின் தெரிவிப்பு

🕔 November 5, 2020

நாட்டின் அதி முக்கிய பிரமுகர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தம்மை தாக்கக்கூடாது என்னும் நோக்கில் சீனாவிடமிருந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசி ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலர்கள் எனவும் இரண்டு கைகளிலும் இந்த தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு ராச்சியத்தின் துணை ஜனாதிபதி சேக் முஹமட் பின் ரசீட் அல் மக்தும் அண்மையில் இந்த தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இலங்கையில் வாழும் அதி முக்கியமான பிரமுகர்கள் சீனாவிடமிருந்து தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளனர் என்றும், ஆனால் மக்கள் பெரும் துயரத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த அதி முக்கிய பிரபுக்கள் யார் என்பதனை நளின் பண்டார சுட்டிக்காட்டாத போதிலும், ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களையே அவர் மறைமுகமாக குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்