தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம்

🕔 November 2, 2020

– மப்றூக் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார்.

இதன் மூலம் ‘இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியர்’ எனும் பெருமை இவருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசியர் எனும் இடத்தினையும் ரமீஸ் அபூபக்கர் பெற்றுள்ளார்.

இந் நியமனம் 05.09.2019ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலை பாடமாகக் கற்ற முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்த கலாநிதி ரமீஸ் அபூபக்கர், அந்தத் துறையின் முதலாவது தலைவராக கடந்த காலத்தில் நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அதே பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தினுடைய பீடாதிபதியாக தரமுயர்த்தப்பட்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை, முதல் தர சித்தியுடன் பூர்த்தி செய்த ரமீஸ், சமூகவியலில் தனது முதுமானிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார்.

அதன் பின்னர், புலமைப் பரிசில் பெற்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் சென்ற அவர், அங்கு தனது கலாநிதிப்பட்டப் படிப்பை பூர்த்தி செய்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரிப் பிரிவின் பொறுப்பாளராகவும் ரமீஸ் பணியாற்றி வந்தார்.

சமூகவியல் தொடர்பில் பல்வேறு நூல்களை எழுதியுள்ள கலாநிதி ரமீஸ் அபூபக்கர் சாய்ந்தமருதை சொந்த இடமாகக் கொண்டவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்