றியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்து விசாரிக்கவும்; ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர், ஜனாதிபதியிடம் கோரிக்கை

🕔 October 10, 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிணங்க ஆளுந்தரப்பை சேர்ந்த 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, மேற்படி கோரிக்கையினை எழுத்து மூலமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட றியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை, அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தின தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் றியாஜ் பதியூதீன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

அவரது கைது தொடர்பில் வலுவான சாட்சிகள் காணப்பட்ட போதிலும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாது, எவ்வித சட்ட அனுமதியுமின்றி றியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னிச்சையான செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு பயங்கரவாதத்துக்கு துணையாக செயற்பட்ட றியாஜ் பதியூதீனை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்