கல்முனை ‘நியூ பஸார்’ கடைகளுக்கு உறுதிப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்காமல் 30 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது
கல்முனை நியூ பஸார் கடைத்தொகுதிகள் உருவாக்கப்பட்டு 40 வருடங்களாகியும் இவற்றுக்கு இன்னமும் உறுதிப் பத்திரங்கள்
கிடைக்காமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும், அக்கட்சிக்கு கண்களை மூடிக்கொண்டு வாக்குப்போட்ட கல்முனை மக்களுமே பொறுப்பாகுவர் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
“கல்முனையை முஸ்லிம் காங்கிரஸ் 30 வருடமாக ஆட்சி செய்கிறது. சந்திரிக்கா அரசில் அஷ்ரப் பலம் பொருந்திய அமைச்சராக இருந்தார். அவருக்குப்பின் ஹரீஸ் எம்.பியாக இருக்கின்றார். அவருக்குப்பின் 2004ம் ஆண்டு ஹக்கீம் கல்முனை மக்களின் அமோக வாக்குகளால் வெற்றி பெற்றார். கல்முனையை சேர்ந்த, நிஜாமுத்தீன், மயோன் முஸ்தபாவும் பிரதி அமைச்சர்களாக இருந்துள்ளனர்
ஆனால் இவர்கள் எவருமே கல்முனை வர்த்தகர்களை பற்றி கணக்கில் எடுக்கவில்லை. தேர்தல் காலத்தில் கல்முனை மக்களை உசார் ஏற்றுவதும் தேர்தலின் பின் கொழும்பில் போய் படுப்பவர்களாகவுமே இருந்து வந்துள்ளனர்.
இந்த வர்த்தக நிலையங்கள் இன்னமும் ‘பேர்மிட்’ பத்திரங்களையே கொண்டிருக்கின்றன. அந்த கடைகளுக்கு உறுதி பத்திரம் முடித்துக் கொடுக்க வக்கற்ற அரசியல் தலைமைகளையே கடந்த 30 வருடமாக மக்களும் தம்வசம் கொண்டுள்ளனர். பத்து வருடங்களுக்கு மேலாக அரச காணியில் இருப்போருக்கு அரசு உறுதி வழங்கும் நிலையில் 40 வருடமாக ஆட்சியுரிமையில் உள்ள கல்முனை வர்த்தகர்களுக்கு காணி உறுதி வழங்கப்படவில்லை.
இந்நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமாயின் கல்முனையை தலைமையகமாகக் கொண்ட கட்சியை நாம் பலப்படுத்த வேண்டும். காரணம் கிழக்கில் எந்த ஊரிலும் இல்லாத பிரச்சினை, இனவாதம் போன்றவை கல்முனையில்தான் உண்டு.
நம் பிரச்சினைகளை தீர்க்க தலைவர்களை தேடி கொழும்புக்கு அலைந்து கொண்டிருந்தால் அடுத்த தேர்தல் வந்து விடும்.
ஆகவே பொதுஜன பெரமுனவின் ஆதரவு கட்சியாகவும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜாக்ஷவை ஆதரிக்க முதலில் களமிறங்கிய முதலாவது முஸ்லிம் கட்சியுமான உலமா கட்சி தனித்து விமானம் சின்னத்தில் போட்டியிடுவதால் அதனை பலப்படுத்த கல்முனை வர்த்தகர்களும் பொது மக்களும், சம்மாந்துறை, பொத்துவில் தொகுதி மக்களும் முன் வர வேண்டும்” என்றார்.