ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்கள் பங்காளியாகிக் கொள்ள வேண்டும்: அலி சப்றி அழைப்பு

🕔 June 30, 2020

– அஸ்ரப் ஏ சமத் –

னாதிபதி தோ்தலில்  வெற்றி கொண்ட கோட்டபாய ராஜபக்ஷ, 2025 வரைக்கும் ஜனாதிபதியாக இருக்கப்போகின்றார். எனவே, இந்த நாடாளுமன்றத்  தோ்தலில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சிக்கு வாக்களித்து, முஸ்லிம்களாகிய நாமும் இவ் அரசாங்கத்தில் பங்காளிகளாகிக் கொள்ளுதல் வேண்டும் என, ஜனாதிபதி சட்டத்தரணியும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளருமான அலி சப்றி தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உள்ளுராட்சிமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்துக்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரமதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் -தெகிவளையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை ரஊப் ஹக்கீமும் றிசாத் பதியுத்தீனும் இணைந்து பிழையான வழிக்கு கொண்டு சென்று விட்டனர். இதற்கு இனியும் நாம் துணைபோகக் கூடாது..

2010ஆம் ஆண்டு முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் சிங்களவா்கள் இணைந்து மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில்  ஒற்றுமையாக வாழ்ந்தோம். பின்னர் இந்தத் முஸ்லிம்  தலைவா்கள்தான், மஹிந்த ராஜபக்ஷவை விட்டும் முஸ்லிம்களை  தூரமாக்கினார்கள்.   

முஸ்லிம்களாகிய நாம் தொடா்ந்தும் பிழையான வழிக்குச் செல்லாது மீள சிந்தித்து செயல்படல் வேண்டும். 2015ஆம் ஆண்டு ஜக்கிய தேசிய கட்சியின்  வலைக்குள்  வீழ்ந்த ரஊப் ஹக்கீமும் றிசாட் பதியுதீனும் முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இருந்து விலக்கி  முஸ்லிம்களை தூரமாக்கினார்கள்.

இங்கு வருகை தந்துள்ள உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் இணைந்து நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் சென்றும்    முஸ்லிம்களை எமது பக்கம் கொண்டுவருதல் வேண்டும்.

வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிகள் இந்த தலைவர்கள் சொல்லும் பசப்பு வாத்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் அவா்கள்  நமது   மக்களை மீண்டுமொரு படு குழிக்குள் கொண்டு சென்று விடுவார்கள்.

நமது மக்களை எமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் கொண்டுவாருங்கள். பொதுஜன பெரமுன –  இந்தத் தோ்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது உறுதியாகிவிட்டது.

ஆகவே நாமும் அதில் பங்காளிகளாகிக் கொள்ளுதல் வேண்டும்.

 இங்கு வருகை தந்துள்ள மக்கள் பிரதிநிதிகள்  தமது  பிரதேசத்தில்   பல்வேறு பிர்ச்சினைகள்  உள்ளதை இங்கு சுட்டிக்காட்டினார்கள். 

இந்தத் தோ்தலில் எவ்வாறு இந்த அரசாங்கத்துக்கு பங்களிப்பது என்று ஆராய்வதற்குத்தான் இங்கு ஒன்று கூடினோம். 

பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் இவ்வாறு ஒரு கூட்டம் நடைபெற 24 மணித்தியாலத்திற்கு முன்பு தொலைபேசி மூலமே  வேண்டுகோள் விடுத்தேன். அவர் கட்டாயம் வருகிறேன் என்று கூறியதோடு, இங்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாறான தலைவா்களுடனேயே நாம் இணைந்து விருப்பத்துடன் அரசியல் செய்கின்றோம். 

வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை 24 மணித்தியாலயங்களுக்குள்  சொப்பிங் பேக்குடன் அன்று விடுதலைப் புலிகள் துரத்தினார்கள். 

உலக நாடுகளால் வெல்ல முடியாத ஒருயுத்தத்தினை, மஹிந்த தலைமையிலான அரசாங்கம் வென்றெடுத்தது.

முஸ்லிம்களாகிய நாம் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற சகல பிரதேசங்களுக்கும் சென்று,  நமக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் வீடுகளுக்கும்  சென்று வருகின்றோம்.

அதே போன்றுதான் ஆயிரக்கணக்கான காணிகளில் மீளவும் எமது விவசாயிகள்  விவசாயம் செய்கின்றனர். அன்று விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் யுத்தம் செய்தபோது, அவா்களுக்கென்று தனியான பொலிஸ் நிலையம், நீதிமன்றம், நிர்வாகம் என  இருந்து வந்தது.  அதற்குள் முஸ்லிம்கள் சிக்கித் தவித்தாா்கள். அவா்களது காணி நிலங்களுக்குள் போகமுடியாத சூழ்நிலை இருந்தது.

வியாபாரம் செய்ய முடியாமல் இருந்தது.  இதனால்  பல துன்பங்களை முஸ்லிம்கள்  அனுபவித்தார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர்தான் நாம் சமதானக் காற்றினை சுவாசிக்கின்றோம். அதற்காவது நாம் நன்றிக் கடமையுள்ளவா்களாக இருத்தல்  வேண்டும். 

2012ல் நடைபெற்ற ஜக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத்தில்  மகிந்த ராஜபக்ஷ  தலைமையிலான அரசாங்கத்துக்கு அரபு நாடுகள் பல உதவின. குறிப்பாக  சவுதி, பாக்கிஸ்தான் துாதுவா்கள்  முன்நின்று இலங்கை அரசுக்கு சாா்பாக வாக்களித்தார்கள். அந் நேரத்தல் நானும்  அவ்விடத்தில்  சென்று அவதானித்தேன். அதன் பிறகு முஸ்லிம்களை வேறாக்குவதற்கு பல தீய சக்திகள் திட்டம் தீட்டினாா்கள். அதற்குள் நாம் அகப்பட்டோம்.  

அன்மையில் நான் கிழக்கு மாகாணத்துக்குச் சென்றிருந்தேன். . அங்குள்ள பள்ளிவாசல் தலைவா்கள், பெற்றோா்கள் எமது பிள்ளைகளை போதைவஸ்துக்களில் இருந்து பாதுகாத்துத் தாருங்கள் எனக் கூறினாா்கள். இதனை  இந்த நாட்டில் இருந்து அகற்றுவதற்கு ஜனதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் எடுத்துக் கூறுங்கள் எனச் சொன்னார்கள். 

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பிள்ளைகள் யாராக இருந்தாலும் இந்த போதையில் இருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி துரிதமாக எடுத்து வருவதை நீங்கள் காணக்கூடியதாக உள்ளது. உலகில் எந்தத் தலைவா்களும் முன்னெடுக்காத  வகையில் கோரோனா தொற்று நோயைத் தடுக்க, ஜனாதிபதி முன்னெடுத்த நடவடிக்கையை பலரும் பாராட்டுகின்றனர்.

அண்மையில் பேருவளையில் கூட ‘லொக்டவுன்’ செய்யும் போது வித்தியமான கோணத்தில் அதனை கதைத்தவா்கள் தற்பொழுது இந்த ஜனாதிபதிக்கு நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்க வேண்டும் என துஆக் கேட்கின்றனர். காரணம் பேருவைளக்குள் தொற்றுக்குள்ளான 200 பேரை  கொரோனா நிலையத்துக்குக் கொண்டு சென்று, அங்கு அவர்களுக்கு எவ்வித குறையுமின்றி நோன்பு பிடிப்பதற்கும் துறப்பதற்கும் ராணுவம் உதவியது. 

இதன்மூலம் எமது பேருவுளை பிரதேசத்தில் கூடுதலாக கொரோனா பரவாமல் ஜனாதிபதி தடுத்ததை அங்குள்ளோர் மெச்சுகின்றனர்.

இந்த ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால் பள்ளிவாசல்களை  உடைத்து விடுவார்கள், பெண்களை பர்தா அணிய விடமாட்டாா்கள் எனச் சொன்னாா்கள். கடந்த 08 மாதத்தில் முஸ்லிம்களுக்கு ஏதாவது அநீதி நடைபெற்றுள்ளதா” எனவும் கேள்வியெழுப்பினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்