கல்முனையில் ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்களைக் கைவிட்டு,பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு, றிசாட் பதியுதீன் அழைப்பு

🕔 June 21, 2019

ல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும், சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள், உடனடியாக போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை அல்லது முஸ்லிம் காங்கிரஸின் நடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும் இணைந்து பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை, வேறு எவரினதோ கைகளில் இப்போது கொடுத்துள்ளனர்.

அவசர காலச் சட்டத்தை பயன்படுத்தி மதகுரு ஒருவர் கல்முனையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். இன்னுமொரு மதகுரு இதனை தீர்த்து வைப்பதாகக் கூறி கல்முனைக்கு செல்கின்றார்.

100 அடி இடைவெளிக்குள் இவ்விரண்டு சமூகங்களும் பிரிந்து நின்று தமது நியாயங்களை எடுத்துரைக்கும் நிலையை பார்க்கும் போது, எனக்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது.

இரண்டு தரப்பும் போராட்டங்களை கைவிட்டு தத்தமது சமூகங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சுமூகமான பேச்சுவார்த்தை ஒன்றின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக்காண ஒன்றுபடுமாறு, நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

மற்றவர்களின் கைகளில் இந்தப் பிரச்சினையைக் கொடுத்து, நீங்கள் தீர்வுகாண விழையும் விதமானது, இந்த நாட்டிலேயே சிறுபான்மையினருக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும், அது ஒரு பிழையான முன்மாதிரி என்பதையும் நீங்கள் மறந்து விட வேண்டாம்’ என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்