தனியாகச் சந்திக்க வேண்டும்; ரணிலின் கோரிக்கையை மைத்திரி நிராகரித்தார்
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
தேவையாயின் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுவாக தன்னுடன் பேச வருமாறும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் பதவியை ஒருபோதும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க மாட்டேன் என்று, மீண்டும் திட்டவட்டமாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, அரசியல் நெருக்கடி நிலையை தீர்க்க பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கு, அனைத்துக் கட்சிகளின் சந்திப்பின் போது ஜனாதிபதி இன்று ஆதரவு கோருவார் என எதிர்பார்கப்படுகிறது.
இன்னொருபுறம், வரவு – செலவுத் திட்டத்துக்குப் இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய அரசாங்க தரப்பு முயற்சி செய்வதாகவும், அது நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தால், பொது தேர்தல் ஒன்றுக்கு செல்லும் சட்டம் உள்ளதா என்பது பற்றி அரசாங்கம் ஆராய்வதாகவும், சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா தெரிவித்துள்ளார்.