ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம்

🕔 April 19, 2018

நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்தனமான செயற்பாடாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்;

“தற்போது இலங்கைக்கு அமெரிக்கா ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை வழங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்தனமான செயற்பாடாகும்.

நாட்டின் முன்னேற்றம் முக்கியமானது. அதற்காக நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.

முன்னர் நாம் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை பெற்றிருந்தோம் ஆனால் இந்த அரசாங்கம் கொடுத்துள்ள அளவுக்கு வாக்குறுதிகள் ஒருபோதும் வழங்கப்படவில்லை.போர்க் குற்ற நீதிமன்றங்களை அமைப்பது உள்ளிட்ட நாட்டின் உள் விவகாரங்களில் மேற்குலகம் தலையீடு செய்யக்கூடிய பல்வேறுபட்ட வாக்குறுதிகளை, இந்த அரசாங்கம் அள்ளி வழங்கியுள்ளது. இது நாட்டின் இறையாண்மைக்கு தாக்கத்தை ஏற்படுத்த கூடியவைகளாகும்.

மேற்குலகத்துக்கு அடிமைப்பட்ட நாடுகள் சீரழிந்த வரலாறுகளே உள்ளன. அவ்வாறு அடிமைப்பட்ட நாடுகள் முன்னேற்றம் கண்டதாக வரலாறுகள் இல்லை. நாம் வரலாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டும்.

நாட்டை அபிவிருத்தி செய்கிறோம் என்ற பேரில், நாட்டின் அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்குவது நாட்டை அழிவுக்கு இட்டுச்செல்லும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்