தலைப்புச் செய்திகள்

பிணை நிபந்தனையினை நிறைவேற்றத் தவறியதால், மஹிந்தானந்தவுக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயை நாளை செவ்வாய்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சராகக் கடமையாற்றிய 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில், விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டில், இன்று திங்கட்கிழமை காலை, நிதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமொன்றினை வழங்கும் பொருட்டு அவர் வருகை தந்தார்.

இந்த நிலையில் அவரைக் கைது செய்த நிதி குற்றப் புலனாய்வு பிரிவினர், கோட்டே நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும் பிணையின் பொருட்டு, மஹிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச் சீட்டினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால், அவரின் கடவுச் சீட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் உள்ளதாகக் கூறப்பட்ட போதும், அதனை நிரூபிக்கத் தவறியமையினால், அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.