ஹக்கீமின் வருகைக்கு எதிராக, சாய்ந்தமருதில் கடையடைப்பு

🕔 February 3, 2018

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு வருகை தருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பிரதேசம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளன.

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் சாய்ந்தமருது வேட்பாளர்களை ஆதரித்து நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ள பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் வருகை தரவுள்ளார்.

ஏற்கனவே சாய்ந்தமருதில் மு.காங்கிரஸ் கட்சினர் ஏற்பாடு செய்திருந்த சில நிகழ்வுகளில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த போதும், அப் பிரதேச மக்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக, தனது வருகைகளை ஹக்கீம் ரத்துச் செய்திருந்தார்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுக் கொடுப்பதில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பாரிய துரோகத்தினைச் செய்துள்ளதாக, அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளதோடு, தமக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரையில், தமது பிரதேசத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை,கட்சிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் மக்கள் கேட்டிருந்தனர்.

இந்தக் கோரிக்கைக்கு சாதகமாக ஏனைய அரசியல் கட்சிகள் நடந்து கொண்டுள்ள போதிலும், முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் எதிர்த்து நின்று செயற்பட்டு வருகிறது.

இதேவேளை, சாய்ந்தமருது மக்களின் ஆதரவுடன், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு சுயேட்சைக் குழுவொன்றும் களமிறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே, சாய்ந்தமருதில் மு.காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் இன்றைய தினம் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளார்.

மு.கா. தலைவரின் இன்றைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, சாய்ந்தமருதில் கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்