வேட்பாளரின் வீடு தீக்கிரை; சதியாக இருக்கலாம் என சந்தேகம்
– க. கிஷாந்தன் –
அக்கரப்பத்தனை பிரதேசபைக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் எம்.ஏ. ரஞ்சித் உப்பாலி என்பவரின் வீடு தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
போபத்தலாவ வலாகம்புற கொலனியில் அமைக்கபட்டிருந்த வீட்டில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும், தீப்பரவல் ஏற்பட்ட போது, குறித்த வீட்டில் எவரும் இருக்கவில்லையெனவும் விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த தீ சம்பவம் தொடர்பாக தனது உறவினர்களை சந்தேகிப்பதாகவும், தான் வேட்பாளர் என்பதனால் சதிகாரர்கள் இவ்வாறான செயலில் ஈடுப்பட்டிருக்கலாம் எனவும் சம்மந்தப்பட்ட நபர் அக்கரப்பத்தனை பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.