மாயக்கல்லி மலையிலுள்ள சிலையை அகற்ற, உள்ளுராட்சி தேர்தலில் மு.கா. தலைவர் ஆணை கேட்பது, கபட நாடகம்: றிசாட் தெரிவிப்பு

🕔 January 21, 2018

 

– எஸ்.எல்.எம். பிக்கீர் –

முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம்; மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.

இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இறக்காமம் சந்தைச் சதுக்கத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இந்த கேள்வியினை முன்வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி. ஹசன் அலி, மக்கள் காங்கிரஸின் தவிசாளர் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப்,  இஷாக் ரஹ்மான் மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவர் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் எம்.ஏ. ஜெமீல் மற்றும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“மர்ஹூம் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் மு.காங்கிரசின் தலைமைப் பொறுப்பினை ஹக்கீம் ஏற்று சுமார் 17 வருடங்களாகின்றன. இந்த நிலையில் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக பலதரப்பட்ட அட்டூழியங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், மு.காங்கிரசின் தலைவரோ கைகட்டி பேசாமடந்தையாக சமூகத்தைப் பற்றி சிந்திக்காதவராக இருக்கின்றார்.  முஸ்லிம்களின் வாக்குகளை ஏலமிட்டு வக்கில்லாத அரசியலை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கென தோற்றுவிக்கப்பட்ட சமூகக் கட்சி, இன்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போயுள்ளது. இது நமக்குத் தேவைதானா? இதுதான் இந்நாட்டு முஸ்லிம்களின் விதியா?

மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள சிலையை இலகுவாக அகற்றிக்கொள்ளவே, யானை சின்னத்தில் தமது கட்சி போட்டியிடுவதாகத் தெரிவிக்கும் ஹக்கீமின் கபட நாடகத்துக்கு நாம் துணைபோகலாமா?

கடந்தகால தேர்தல்களின் போது, ஒவ்வொரு பிரதேசத்துக்கும் வந்து, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய இவர்கள், இற்றைவரை எதையுமே நிறைவேற்றவில்லை.

வாக்குறுதிகளை பெற்றுக் கொண்ட பிறகு, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டு, அடுத்த தேர்தலுக்கு மீண்டும் வந்து மக்களை உணர்வூட்டி, வாக்குகளைக் கொள்ளையடித்துச் செல்வதை இவர்கள் ஒரு கலாசாரமாக்கி விட்டனர்.

இதனை கட்சிக்குள் தட்டிக் கேட்பவர்களை தூக்கி வீசுகின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் உழைத்த பலர் தற்போது எம்முடன் இணைந்து, சமூகப் போராட்டத்தில் பயணிக்க முன்வந்துள்ளார்கள்.

மாயக்கல்லி மலை அடிவாரத்தில் முஸ்லிம்களுக்கும், பௌத்த தேரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் நாம் அச்சமடைந்தோம். ஜனாதிபதியுடனும், பிரதமருடனும், பாதுகாப்புத் தரப்பினருடனும் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை சுமுகமாக்கினோம்.

ஆனால், முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவார் என்று நம்பி, நீங்கள் ஆண்டாண்டுகாலமாக வாக்களிக்கும் தலைவர், உறுதிமொழிகளை மட்டுமே தந்தாரே தவிர, இன்னும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

முஸ்லிம்கள் மானத்தோடும், கௌரவமாகவும், தலைநிமிர்ந்து வாழவும், தமக்கெதிரான அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவும் எமது கட்சியை ஆதரிக்குமாறும், எமது பயணத்தில் இணைந்துகொள்ளுமாறும் நான் உருக்கமாக வேண்டுகின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்