மறியல் போராட்டம் நடத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நிருவாகத்துக்கு இடையூறு செய்வதாகவும் புகார்

🕔 December 29, 2017

– மப்றூக் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தின் முன்பாக, அந்தப் பல்லைகக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள், மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமையினால், பல்கலைக்கழக நிருவாகக் கடமைகளை மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

பொறியியல் பீட மாணவர்கள் மூவருக்கும், தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் இருவருக்கும் பல்கலைக்கழக நிருவாகத்தினால் விதிக்கப்பட்டுள்ள தலா இரண்டு வருடகால வகுப்புத்தடையினை நீக்குமாறு கோரியே, இந்த மறியல் போராட்டத்தை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை – மாணவர்கள் ஆரம்பித்த இந்த மறியல் போராட்டம், இன்றும் தொடர்கிறது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினருக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், மாணவர்களின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை தாம் பதிவு செய்துள்ளதாகவும், உபவேந்தர் நாஜிம் கூறினார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் – பொறியியல் பீட மாணவர்களுக்கும் தொழில்நுட்பவியல் பீட மாணர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், பொறியியல் பீட மாணவர்கள் மூன்று பேருக்கு, தலா இருண்டு வருடகால வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.

அதேவேளை, தொழில்நுட்பவியல் பீடத்தின் கனிஷ்ட மாணவர்களை பகிடிவதை செய்த, அதே பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்கள் இருவருக்கும், பல்கலைக்கழக நிருவாகம் – தலா இரண்டு வருடகால வகுப்புத் தடையினை விதித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்