ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு
தற்போதைய ராஜாங்க அமைச்சரும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருமான பாலித ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய போது, பாலித ரங்க பண்டார ஓய்வு பெற்று, அரசியலுக்குள் நுழைந்தார்.
இந்த நிலையில், தான் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய போது, அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டிருந்ததாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருந்தார்.
இந்த முறைப்பாட்டினை ஆராய்ந்த பொலிஸ் ஆணைக்குழு; பாலித ரங்க பண்டாரவை 24 பெப்ரவரி 2000ஆம் ஆண்டிலிருந்து பொலிஸ் சேவைக்குள் மீளவும் உள்வாங்கி, அதே மாதம் 27ஆம் திகதி அவரை உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்த்தி, அதன் பின்னர் அவருக்கு ஓய்வு வழங்குமாறு சிபாரிசு செய்துள்ளது.
இதேவேளை, பதிவு உயர்வு வழங்கப்பட்ட காலத்திலிருந்து, அதற்குரிய சம்பளத்துக்குரிய ஓய்வூதியத்தினையும், அவர் பெற்றுக் கொள்ள முடிவும் எனவும் தெரிவித்துள்ளது.