பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்; விசாரணைக்கு உதவும் நடவடிக்கை என்கிறது அமைச்சு
பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வியமைச்சுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்.
பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு, இந்த இடமாற்றமானது உதவியாக அமையும் என, அமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் ரகசிய மற்றும் நிறுவனப் பிரிவின் பிரதி ஆணையாளர், அவரின் சேவையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டார். அவர் தனது கடமையில் அலட்சியமாகவும் தவறாகவும் நடந்து கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டமையினை அடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த நடவடிக்கையினைஅடுத்தே, தற்போது பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமும் இடமாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த காலத்தில் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பரீட்சைகள், வினாத்தாள் திருத்தம், வினாத்தாள் தயாரித்தல், பரீட்சைகள் சபைக்கான நபர்களை நியமித்தல் மற்றும் பரீட்சைகள் பற்றிய ரகசியங்களைப் பாதுகாத்தல் தொடர்பில் தற்போது விசாரணைகள் தொடங்கியுள்ளதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.