புதிய அரசியலமைப்பின் பின்னணியில் புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் உள்ளனர்: கோட்டா
புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் புலிகள் அமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.
பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியாமலும், நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வர முடியாமலும் செய்த இவர்கள்தான், தற்போது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் முன்னணியில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னைய அரசாங்கத்தை மிரட்டிய உள்ளுர் மற்றும் வெளிநாட்டுக் குழுக்கள்தான் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் நடவடிக்கையை ஆரம்பித்ததாகவும் கோட்டா இதன்போது கூறினார்.
புதிய அரசியலமைப்பு கொண்டு வருவது – பிரிவினைவாதிகளின் தேவைக்காகவே அன்றி, பொதுமக்களின் தேவைக்காகக் கொண்டு வரப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.