நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டங்களைக் கொண்டுவந்து, இறைமையை அரசாங்கம் அழிக்கிறது: மஹிந்த விசனம்

🕔 September 21, 2017

பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளை கூறிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கம்  சகல தேர்தல்களையும் பிட்போடவே முயற்சித்து வருகிறது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 20 வருட அரசியல் வாழ்வின் பூர்த்தியையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்;

“நாட்டுக்கு பொருத்தமில்லா கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டுவந்து நாட்டின் இறைமையை அழிக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலை பிற்போட்டு தமது ஆட்சியை தக்கவைக்க முயற்சித்து வருகின்றனர்.

இருந்தபோதும் ‘அரசாங்கம் ஒருபோதும் தேர்தலை பிற்போட தயாராக இல்லை, பெண்களின் அரசியல் பலத்தை பெருக்கவே தேர்தல்கள் தாமதமாகின்றது’ என்றும் அரசாங்கம் கூறுகின்றது.

நாம் உருவாக்கிய இந்த நாட்டின் அமைதியும் ஜனநாயகமும் இன்று அழிக்கப்பட்டு மோசமான திசையில் நாடு பயணித்து வருகின்றது. மேலும் இந்த நாட்டுக்கு ஏற்புடையதாகாத பல சட்டங்கள், கொள்கைகள் இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது, இந்த நாட்டை ஆதரிக்கும், நேசிக்கும் எம்மால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமுடியாமல் உள்ளது” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்