வடக்கு முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு காணிப் பிரச்சினைதான் தடையாக உள்ளது: அமைச்சர் றிசாத் பதியுதீன்

🕔 May 8, 2017

 

டக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர்களுக்குத் தேவையான பாடசாலை மற்றும் கட்டிட வசதிகளை அமைப்பதிலும் பெருந்தடையாக இருப்பது காணிப்பி ரச்சினைதான். இதனால்தான் பல்வேறு சிக்கல்களுக்கு நாங்கள் முகங்கொடுக்கவேண்டி நேரிடுகின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் பெரிய கரிசலில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள  அலாவுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“மன்னார் மாவாட்டத்தில் சிலாவத்துறை, மறிச்சிக்கட்டி, பெரியமடு, காக்கையன்குளம் விடத்தல்தீவு, சன்னார், தலைமன்னார் பியர், மற்றும் முல்லைத்தீவு யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் முஸ்லீம்கள் மீளக்குடியேறச் சென்ற போது காணிப்பிரச்சினை பெருந் தடையாக இருந்தது.  இப்போதும் அந்த நிலை தொடர்கின்றது. இதனால் சில கிராமங்களில் அவர்களுக்கெதிரான வழக்குகளும் சில கிராமங்களில் இன விரிசலும் ஏற்பட்டன. மன்னாரில் பாரம்பரிய கிராமமான கரிசல் சனச்செறிவும் நெருக்கமும் அதிகரித்தனால் அந்தக்கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்காக புதிய கிராமமொன்று உருவாக்கப்பட்டது.

இவர்களின் தேவைகளுக்காக பரோபகாரியும் தொழிலதிபருமான அலாவுதீன் ஹாஜியார் காணிகளையும் வழங்கி அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு மனமுவந்து உதவி செய்தார். அதற்கு பிரதியுபகாரமாக அவரால் நன்கொடையளிக்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட இந்தப் பாடசாலைக்கு அவரது பெயர் பொறிக்கப்பட்டமை சிறப்பானது.

பாடசாலையொன்றை அமைப்பதென்பது மிகவும் கடினமான பணியென்பதை அனைவரும் அறிவர். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு ஞாபகப்படுத்த விரும்பகின்றேன்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக இருந்த விமரவீரதிசநாயக்க தனது சொந்தக்கிராமத்தில் ஆரம் பாடசாலை அமைக்க மேற்கொண்ட முயற்சியையடுத்து, ஆளுநருக்கும் மாகாண அமைச்சுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. முரன்பாட்டை தீர்ப்பதற்காக இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களையும் அரசியல் தலைவர்களையும் அழைத்து சமரசம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் நாட்டுத்தலைவருக்கு ஏற்பட்டது. இதுதான் அப்போதைய நிலையாக இருந்தது.

எனினும் இறைவன் உதவியால் கடந்த 03 வருடங்களுக்க முன்னர் மக்கள் வருவார்கள், மாணவர்கள் வந்து இங்கு கல்வியைத் தொடர்வார்கள் என்று நாம் தூரதிருஷ்டியோடு மேற்கொண்ட பகீரத முயற்சியே, இந்தப்பாடசாலையின் உருவாக்கமாகும். இது மட்டுமன்றி மீளக்குடியேறிய மாணவர்களின் கல்வித் தேவைக்காக, வடமாகாணத்தில் எத்தனையோ புதிய பாடசாலைகளை நாம் நிர்மாணித்துள்ளோம்.

பாடசாலைகளை உடனடியாக தரமுயர்த்த வேண்டுமென பெற்றோர்கள் கோருவதும் அங்கலாய்ப்பதும் பாடசாலையின் கல்வி அடைவுக்கு ஆரோக்கியமானதல்ல என்பதே எனது கருத்தாகும். ஏனெனில் போதிய வளமில்லாமல் குறிப்பிட்ட பாடங்களுக்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர் இல்லாமல் சிறந்த ஆய்வுகூட வசதியில்லாமல் பாடசாலைகளின் தரத்தை மாத்திரம் அதிகரித்து பெருமை கொள்வதன் மூலம் மாணவர்களின் கல்வியை உயர்த்த முடியாது. உரிய பாடசாலையில் குறிப்பிட்ட தரத்தில் உள்ள மாணவர்களை சிறந்த பெறுபேறுகளை ஈட்டச்செய்து, தரமான பாடசாலைகளுக்கு அனுப்புவதன் மூலமே உரிய இலக்கை நாம் அடைய முடியும்.

ஒரு பாடசாலையின் உயர்வில் அதிபர்களினதும் ஆசிரியர்களினதும்  பங்களிப்பே பிரதானமானது. அதிபர்கள் கௌரவமானவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் கருதப்படுகின்றனர். ஆசிரியத்  தொழில் மகத்துவமானது எல்லோராலும் நேசிக்கப்படுகின்றது. எனவே தமக்குக் கிடைத்த இந்தப் பதவியை அமானிதத்துடன் இவர்கள் பேண வேண்டும். மாணவர்களின் கல்வி ஒழுக்கம், மாணவர்களின் வரவு ஆகியவற்றை கண்காணிப்பவர்களாகவும் அவர்களின் பொருளாதார நிலையை இனங்கண்டு தேவைப்பட்டால் அவற்றை பெற்றுக்கொடுக்கும் வழிவகைகள் தொடர்பிலும் தமது கவனத்தைச் செலுத்துபவர்களாகவும் அதிபர், ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

பிள்ளைகளின் கல்வியிலே பெற்றோரின் பங்களிப்பு இன்றியமையாதது. குறிப்பாக தாய்மார்கள் மாலை வேலைகளில் தங்கள் பிள்ளைகளையும் அரவணைத்துக்கொண்டு தொலைக்காட்சியில் நேரத்தை செலவிடுவது அவர்களது எதர்காலத்தை பாழடிக்கும் செயலாகும்.” என்றார்.

பாடசாலை அதிபர் என்.எம்.சுஐப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், வலயக்கல்விப் பணிப்பாளர் சுகந்தி செபஸ்டியன், தொழிலதிபர் அலாவுதீன் ஹாஜியார் உட்பட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காமில் முன்னாள் நகரசபை உறுப்பினர் நவ்சீன் எனப்பலரும்  கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்