வாங்காமம் அனர்த்தம்; உணவு விசமானதில் பாதிக்கப்பட்ட மூவர் மரணம்
– றிசாத் ஏ காதர் –
இறக்காமம் – வாங்காமம் பிரதேசத்தில் கந்தூரி உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டவர்களில் மூவர், சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வாங்காமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற கந்தூரி வைபவத்தில் சமைத்து விநியோகிக்கப்பட் உணவு விசமானதில், அதனை உட்கொண்ட 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற கந்தூரி நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் அங்கு பரிமாறப்பட்ட உணவை உட்கொண்டனர். இதனையடுத்து, அதனை உட்கொண்டவர்கள் கடுமையான வாந்தி, தலைசுற்றல் மற்றும் மயக்கம் போன்ற உபாதைகளுக்கு உள்ளானார்கள்.
இவ்வாறு பாதிப்புக்குள்ளான மக்கள்- இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். மேலும் சிலர் அம்பாறை மற்றும் கண்டி வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மூன்று கற்பிணிப் பெண்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக, கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, வெளிப் பிரதேசங்களிலிருந்து வைத்தியர்கள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.