கருணா அம்மானைக் காண விமல், கம்மன்பில உள்ளிட்டோர், வெலிக்கடை விஜயம்
🕔 December 2, 2016
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Kilakkin-Kedayam-750x150-01-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/02/EFC-750X150-02.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/12/Atham-Lebbe-01-7500X150-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/01/Abdullah-750X150-03-.jpg)
கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரைப் பார்ப்பதற்காக, இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சி.பி. ரத்னாயக்க மற்றும் ஜனாக்க வக்கும்புர ஆகியோர் சென்றிருந்தனர்.
இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே, மேற்கண்டவாறு விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இனவாதத்தைத் தூண்டும் வகையில் திஸ்ஸ அத்தநாயக்க செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் அவ்வாறு செயற்படவில்லை.
இதேவேளை, அரச வாகனத்தை மீள ஒப்படைக்கவில்லை என்று கருணா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தன்னிடமிருந்த வாகனத்தை ஒப்படைப்பதற்காக ஜனாதிபதி செயலகத்துக்கு கருணா கடிதம் எழுதியிருந்தார். மேலும், அந்த வாகனத்தை அவர் பயன்படுத்தவுமில்லை.
ஆட்சியாளர்கள் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவும், இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னதாகவும் எதிரணியினரை ஒடுக்குவதற்கு முற்படுகின்றனர்.
அரசாங்கம் தனது தந்திரோபாயங்கள் மூலம் எதிரணியினரை அச்சுறுத்த முடியாது” என்றார்.
![](https://puthithu.com/wp-content/uploads/2024/03/Alahapuri-750X150-01.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Fairoos-Express-750x150-01-.jpg)