40 மில்லியன் ரூபாய் வாகனம்; இறக்குமதி செய்த அமைச்சர் யார்: தெரியாது என்கிறார் ராஜித
அமைச்சர் ஒருவர் 40.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெர்சிடிஸ் பென்ஸ் S300 ரக கார் ஒன்றினை இறக்குமதி செய்துள்ளார். ஆனால், குறித்த அமைச்சர் யார் என அறிய முடியவில்லை என கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் காரின் விபரங்கள் மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன.
தற்போது, குறித்த கார் – பத்தரமுல்லையிலுள்ள அமைச்சர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த காரினை யார் இறக்குமதி செய்தார் என்று, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை இணைப் பேச்சாரள் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனாலும், இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என, அமைச்சர் ராஜித கூறினார்.
மக்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையில், அமைச்சர்கள் இவ்வாறு அதிக விலைகொண்ட ஆடம்பரக் கார்களை இறக்குமதி செய்கின்றமை குறித்து மக்கள் கடுமையான விசனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேற்படி மெர்சிடிஸ் பென்ஸ் S300 ரக கார் – ஹைபிரிட் வகையினைக் கொண்டதோடு, பல்வேறு நவீன வசதிகளையும் உள்ளடக்கியதாகும்.