கருணா அம்மானுக்கு விளக்க மறியல்; அரச வாகனத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று செவ்வாய்கிழமை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான சுமார் 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் இவர் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் கருணா அம்மான் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், குறித்த வாகனத்தை கருணா அம்மான் முறையற்ற வகையில் உபயோகித்து வந்தார் எனக் கூறப்படுகிறது.
இதன்போது கருணா அம்மானின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவிக்கையில்; குறித்த வாகனத்தை ஒப்படைப்பது தொடர்பாக, ஜனாதிபதி செயலகத்துக்கு கருணா அம்மான் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அதற்கு ஜனாதிபதி செயலகம் பதிலளிக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட வாகனம் பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும் கருணாவின் சட்டத்தரணிகள் கூறினர்.
இருந்தபோதும், கருணா அம்மானை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.