தொப்பி அளவானதால் போட்டுக் கொண்டுள்ளனர்; தில்ருக்ஷி விலகல் குறித்து, டிலான் பெரேரா கருத்து
“நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் எந்த அதிகாரியையோ அல்லது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நபர்களையோ, சுயாதீன அமைப்புக்களிலுள்ள நபர்கள் எவரையுமோ தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டி உரையாற்றவில்லை. ஜனாதிபதியின் உரையினால் மனச்சாட்சி உறுத்தும் நபர்கள் பதவிவிலகுகின்றனர் என்று கருதமுடியும். ஜனாதிபதி சுட்டிக்காட்டியமைக்கு அமைய தொப்பி சரியாக இருப்பின் உரிய நபர்கள் போட்டுக்கொள்ளலாம்” என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் ராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க பதவி விலகியமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்;
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையும் ஊழல்வாதிகள் என்றோ அல்லது அரசியல் தலையீடுகளுடன் செயற்படுகின்றனர் என்றோ சுட்டிக்காட்டவில்லை. நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு என்பன சுயாதீனமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டினார். அதை தவறான கோணத்தில் சித்தரிக்க எவரும் முற்படக்கூடாது. அதேபோல் லஞ்ச ஊழல் ஆணைக்குவின் பணிப்பாளர் தில்ருக் ஷி டயஸ் விக்ரமசிங்க பதவி விலகியமை தொடர்பில், எந்தக் கருத்துக்களையும் என்னால் தெரிவிக்க முடியாது. ஏன் பதவி விலகினார் என்பதை அவரிடமே வினவ வேண்டும்.
மேலும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் எந்த அதிகாரியையோ அல்லது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நபர்களையோ, சுயாதீன அமைப்புக்களிலுள்ள நபர்கள் எவரையுமோ தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டி உரையாற்றவில்லை. அவ்வாறு இருக்கையில் மனச்சாட்சி உறுத்தும் நபர்கள் பதவி விலகுகின்றனர் என்றுகூட கருத முடியும்.
அவ்வாறான நிகழ்வாகக்கூட, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவி விலகியமை இருக்க முடியும் அல்லவா? ஜனாதிபதி தெரிவித்தமைக்கு அமைய தமக்குத்தான் இந்த கருத்துக்கள் பொருந்தும் என நினைக்கும் நபர்கள், தொப்பி சரியாயின் போட்டுக்கொள்ளலாம்” என்றார்.