நல்லாட்சி பொருளாதாரம்: கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகம் என்று கூற முடியாதாம்
கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாதுள்ளதாகக் கூறவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.
தொலைத் தொடர்பு கட்டணங்கள் மீது வற் வரி விதிக்கப்பட்டுள்ளமையினை நியாயப்படுத்தும் வகையில், அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.
கைத் தொலைபேசி என்பது அடிப்படை பொருளல்ல. அதனை கொள்வனவு செய்ய முடியுமான ஒருவர், வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளதெனக் கூற முடியாது என்று, அமைச்சர் யாப்பா மேலும் தெரிவித்தார்.
இதேபோன்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரத்னவும் கடந்த வாரம், வற் வரியை நியாயப்படுத்திப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 20 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஆனால், 21 மில்லியன் கைத் தொலைபேசிகள் பாவனையில் உள்ளன. எனவே, வற் வரி விதிப்பது அநீதியல்ல என்று அமைச்சர் ராஜித குறிப்பிட்டார்.