வர்த்தகர் சகீம் கொலை; சந்தேக நபர்கள் ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை
பம்பலப்பிட்டி கோடீஸ்வரர் முகம்மட் சகீம் சுலைமான் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஐந்து வர்த்தகர்களுக்கு, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த தடையுத்தரவை இன்று வியாழக்கிழமை பிறப்பித்தார்.
வர்த்தகரின் கொலை தொடர்பில் கொழும்பு மற்றும் கேகாலை பொலிஸாரை உள்ளடக்கி எட்டு பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்திவருகின்றன.
கொலையுண்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக, கேகாலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மேற்படி வர்த்தகர் சகீம், அவரின் வீட்டின் முன்பாக வைத்துக் கடத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவரின் சடலம் – எரியுண்ட நிலையில், நேற்று புதன்கிழமை மாவனல்ல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.