நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பணிப்பாளராகச் செயற்பட்ட இரேஷா டி சில்வா என்பவரை கைது செய்வதற்கு, இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்பரேட்டர்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட மேற்படி நபர், தற்பொழுது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு முன்வைத்த காரணங்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் நிஷாநத பீரிஸ், நேற்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தில் மற்றுமொரு பணிப்பாளராக கடமையாற்றும் சுஜானி போகொல்லாகமவிடமிருந்து, மருத்துவ அறிக்கையொன்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் நாமலினுடைய நிறுவனம் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் போது, அரசாங்கத்துக்கு 45 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போதே, நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.