உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல்
பாத யாத்திரை செல்வதனால், உடல் எடையை வேண்டுமானால் குறைக்க முடியும். அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக முன்னெடுத்துவரும் பாதை யாத்திரை தொடர்பிலேயே, மேற்படி கருத்தினை ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
ஆட்சியை மாற்றப்போவதாகக் கூறி, கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி ஆரம்பித்துள்ள பாதயாத்திரையால், மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை. இதனைக் கண்டு, அரசாங்கம் பீதியடையாது என்றும் அவர் கூறினார்.
கொலன்னாவையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிக்கையில்; பாதயாத்திரையால் ஜனாதிபதியோ, பிரதமரோ தங்களது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள போவதில்லை என்றும், 05 வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் பிளவுபடாது என்றும் தெரிவித்தார்.