இனரீதியான பாரபட்சம் நீடிக்கிறதா; சந்தேகம் எழுவதாக சபையில் ஹக்கீம் தெரிவிப்பு
இன ரீதியான பாரபட்சம் நீடிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தால் இன நல்லிணக்கம் எவ்வாறு ஏற்படும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
தற்போதைய நிலையில் பிரயோக ரீதியாக பொது மக்களிடத்தில் எவ்வளவு காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக சீர்தூக்கிப்பார்க்க வேண்டியுள்ளது. அதேபோன்று வடக்கு கிழக்கில் காணப்படும் ராணுவ பிரச்சினை குறித்தும் சீர்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு – கிழக்கில் அவர்களுக்குச் சொந்தமான காணிகள் தற்போதும் பெருமளவில் விடுவிக்கப்படாதிருக்கின்றன.
குறிப்பாக சில இடங்களை கூறவேண்டியுள்ளது. மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறையில் முஸ்லிம்கள் பூர்வீகமாக பரம்பரையாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்த தருணத்தில் அங்கு பாரிய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை அகற்றி பொது மக்களிடத்தில் கையளிக்க வேண்டும் என்பது குறித்து பிரதமரிடத்திலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அந்த முகாம் அகற்றப்பட்டு பொது மக்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும்.
இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் புல்மோட்டை, மண்கிண்டி, அரிசிமலை பகுதிகளில் பொது மக்களின் விசேடமாக முஸ்லிம் மக்களின் காணிகளை ராணுவத்தினர் கையகப்படுத்தி முகாம்களை அமைத்து வைத்துக் கொண்டுள்ளனர்.
பொத்துவில் பகுதியில் கடற்படையினரும் திருகோணமலை வெண்மணல் பகுதியில் விமானப் படையினரும் காணிகளை சுவீகரித்து ஹோட்டல்களை அமைத்துள்ளனர். திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள ஐந்து விவசாய அமைப்புக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அதே நேரம் ஹிங்குரான பகுதியில் கரும்புச் செய்கையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இது சம்பந்தமாக அம்பாறை மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்துரையாடி குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. தற்போதும் கூட சில பகுதிகளில் நிர்வாக எல்லையைப் பயன்படுத்தி அங்கு வேறு இனத்தவர்கள் தாம் பூர்வீகமாக மேற்கொண்ட விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்காது காணப்படும் நிலைமைகள் உள்ளன.
இவ்வாறான நிலையில் எவ்வாறு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படும்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசப்படுகின்றது. நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணிகள் தொடர்பான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் காணி ஆணைக்குழு நியமிக்கப்படாது காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.
தற்போது வரையில் காணி ஆணைக்குழுவை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட மத்திய அரசாங்கத்தின் தலையீடு நீக்கப்பட வேண்டும் என்பதை இச்சபையில் வலியுறுத்த விரும்புகின்றேன். அதேநேரம் தற்போது ஆட்சியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் விசேட நீதிமன்றங்களின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
செப்டெம்பர் மாதத்திலும் எதிர்வரும் மார்ச் மாதத்திலும் ஜெனிவா கூட்டத் தொடர்களுக்கு முகங்கொடுக்கப் போகின்றோம். இந்த விடயங்களில் முன்னேற்றங்களை காணாது அடுத்த கட்டம் குறித்து எவ்வாறு கவனம் செலுத்துவது என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது.
இதேவேளைஇ நிர்வாக சேவையில் இன ரீதியில் பாரபட்சம் காட்டப்படுகின்றதா? என்ற சந்தேகம் தொடர்பில் தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. குறிப்பாக வனவிலங்கு இலாகா, வனவிலங்கு திணைக்களம் ஆகியவை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற போது அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கடமையுள்ளது.
எனினும் அங்கு இன ரீதியான பாகுபாட்டுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. நிர்வாக சேவையில் காணப்படும் அதிகாரிகளை நேரடியாக இவ்விடயத்தில் குற்றஞ்சாட்டுவது நோக்கமல்ல. ஆனாலும் இவ்வாறான பாகுபாடு இன்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.