அட்டாளைச்சேனையில் கார் விபத்து; 12 வயது சிறுவன் பலி
– றிசாத் ஏ காதர் –
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று புதன்கிழமை மாலை காரில் மோதுண்டு விபத்துக்குள்ளான சிறுவன் அதே இடத்தில் பலியானார்.
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், அட்டாளைச்சேனை கால்நடை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றது.
கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த கார், சிறுவன் மீது மோதியதில் சிறுவன் அந்த இடத்திலேயே பலியானார்.
அட்டாளைச்சேனை 08ம் பிரிவைச் சேர்ந்த ஜே. ஜெம்ஸத் (வயது-12) என்ற மாணவனே இவ்வாறு பலியானதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ் விபத்து தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த பொறியிலாளர் ஒருவர் வாகனத்தைச் செலுத்தி வந்த போதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.
விபத்தினை ஏற்படுத்திய கார், வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றினை முட்டி சேதப்படுத்தியவாறு, அருகிலிருந்த கட்டிடத்திலும் மோதியுள்ளது.