ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது
– எப்.முபாரக் –
திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி ஆற்று மணல் ஏற்றிச்சென்ற இருவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 30 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் சீனிபுரவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி கந்தளாய் பகுதிக்கு உழவு இயந்திரத்தில் மணலைக் கொண்டு சென்ற போதே பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேக நபர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்கள் இன்று கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.