தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மூன்றாவது தடவையாக இன்று விசாரணைக்குச் சென்றிருந்த நிலையில், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவின் கீழ் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில், தாஜுதீனின் மரணத்தை விபத்து என பதிவு செய்யுமாறு, தனக்கு கீழ் பணியாற்றிய பொலிஸாரை அனுர சேனநாயக்க பணித்ததாகக் கூறப்படுகிறது.
நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி, அண்மையில் – தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
இவர் வழங்கிய வாக்கு மூலத்தில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவின் பணிப்பின் பிரகாரமே தான் செயற்பட்டதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.