தங்கி சிசிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், ஊழியர்கள் அலட்சியமாகச் செயற்படுவதாகப் புகார்
– க. கிஷாந்தன் –
டயகம பிரதேச வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில், அங்கு கடமை புரியும் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதாக, நோயாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
டயகம தோட்ட பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், கடந்த 28 ம் திகதி ஆஸ்துமா நோய்யினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரின் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.
இதன்போது, குறித்த நோயாளிக்கு சேலைன் ஏற்றப்பட்டது. நோயாளிக்கு உதவியாக அவருடைய பேரனும் வைத்தியசாலையில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், மேற்படி நோயாளிக்கு செலுத்தப்பட்ட சேலைன், நள்ளிரவு 12 மணியளவில் முடிவடைந்துள்ளது.
ஆனாலும், இது குறித்து சம்பந்தப்பட்ட எவரும் கவனிக்கவுமில்லை, சேலைன் போத்தலினை அப்புறபடுத்தவுமில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சேலைன் போத்தலினை அகற்றுமாறு பல முறை ஊழியர்களிடம் கூறியபோதும், அவர்கள் அலட்சியமாக இருந்ததாகவும், இதன் காரணமாக குறித்டத சேலைன் போத்தலினை தானே அகற்றியதாகவும் நோயாளி தெரிவித்தார்.
இவ்வைத்தியசாலைகளில் இரவு வேளைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில், உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.