
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் தொடர்பில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (19) நாடாளுமன்றில் தகவல்களை வெளியிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த தகவலைக் கூறினார்.
பிரதமர் வெளியிட்ட தகவல்களின் படி;
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதத்திற்கு ரூ. 54,285 சம்பளமும், மாதத்திற்கு ரூ. 1,000 பொழுதுபோக்கு கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.
சாரதிக்கான கொடுப்பனவு மாதத்திற்கு ரூ. 3,500 வழங்கப்படுகிறது. இருப்பினும், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சாரதியொருவர் வழங்கப்பட்டால், சாரதிக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.
தொலைபேசி கொடுப்பனவு ரூ. 50,000, போக்குவரத்து கொடுப்பனவு மாதத்திற்கு ரூ. 15,000, அலுவலக கொடுப்பனவு ரூ. 100,000 வழங்கப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 2,500 வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அமர்வில் இல்லாத நாட்களில் குழு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 2,500 வழங்கப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கான தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவையும் பெறுகிறார்கள்.
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இது மாதத்திற்கு 419.76 லிட்டர் டீசல் என கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் அங்கீகரிக்கப்பட்ட சந்தை விலையில் கொடுப்பனவு செலுத்தப்படுகிறது.

இந்த கொடுப்பனவுகள் உத்தியோகபூர்வ கடமைகள் மற்றும் போக்குவரத்து செலவுகளை ஈடுகட்ட கட்டமைக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய விளக்கமளித்தார்.


