சரணடைந்த பெளத்த பிக்குகளுக்கு, நாளை வரை விளக்க மறியல்

🕔 February 15, 2016

Sinhala ravaya - 086ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை சரணடைந்த சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகளையும், நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனும் குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியானை பிறப்பித்திருந்த நிலையில், மேற்படி நால்வரும் இன்று திங்கட்கிழமை மாலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

இதனையடுத்து, மேற்படி நால்வரும் ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவர்களை நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, மேற்படி நால்வரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் பணிப்புரை வழங்கியுள்ளார்.

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை விளக்க மறியலில் வைக்குமாறு, கடந்த 27 ஆம் திகதி ஹோமாகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது, அவரை விடுதலை செய்யுமாறு கோரி, நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

அந்தவகையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பெண், 06 பௌத்த பிக்குகள் உள்ளடங்கலாக மொத்தம் 11 பேர் இதுவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்பான செய்தி: சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நால்வர், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரண்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்