
அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் நீர் பிடிப்புள்ள பகுதிகளில் (Wetlands area) உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணித்துள்ளவர்கள் என, அனர்த்த முகாமைததுவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.
இவ்வாறு அனுமதியின்றி – நீர்ப் பிடிப்புள்ள பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டமையால், ஆபத்தற்ற பகுதிகளாகக் கருதப்பட்ட இடங்களில்கூட – வெள்ளம் புகுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்திலிருந்து பெருமளவான நீர் திறந்து விடப்பட்டுள்ளமையாலும் அம்பாறை மாவட்டத்தின் தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
அதேபோன்று ஆறுகள், நீர்ப்பாசன (Irrigation) பகுதிகள் மற்றும் விவசாய இடங்களின் ஒதுக்குப் பகுதிகளை (Reservation area) ஆக்கிரமித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களும் வசிப்பிடங்களும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் றியாஸ் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக நீர் பிடிப்புள்ள பகுதிகளில் (Wetlands area) உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணித்தவர்களும், தற்போதைய வெள்ளத்தில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் றியாஸ் சுட்டிக்காட்டினார்.




