எல்ல நீர்வீழ்ச்சியில் குளித்த நான்கு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

🕔 March 21, 2023

– பாறுக் ஷிஹான் –

சுற்றுலா சென்ற நிலையில் – எல்லாவல நீழ்வீழ்ச்சியில் நீராடிய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களில் நால்வர் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.

மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் – அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் மேற்படி நீழ்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது, அவர்களில் நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இவ்வாறு நீர்வீழ்ச்சியில் காணாமல் சென்றவர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதினையுடையவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சி

எல்லாவல நீர்வீழ்ச்சி கடந்த வருடம் (2022) செப்டம்பர் (06) முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள எல்லாவல நீர்வீழ்ச்சியை காணவும் அங்கு நீராடவும் தினமும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

அங்கு நீராடச் சென்ற சிறு பிள்ளைகள் உட்பட பலர் உயிரிழந்ததையடுத்து, எல்லாவல நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல – பிரதேச செயலாளர் தடைவிதித்திருந்தார்.

ஆயினும் கடந்த வருடம் (2022) மார்ச் மாதம் 3ஆம் திகதி முதல், பல மாதங்களாக மூடப்பட்டிருந்த எல்லாவல நீர்வீழ்ச்சி கடந்த வருடம் (2022) செப்டம்பர் (06) முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

தற்போது நீர்வீழ்ச்சியைச் சுற்றி பாதுகாப்பு கயிறுகள் அமைக்கப்பட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு – சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுமாறும் வெல்லவாய பிராந்திய சுற்றாடல் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையிலேயே அங்கு குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்