“தாமரைக் கோபுரத்துக்காக பெற்ற கடனைத் தீர்க்க, அதன் மூலம் 41 ஆயிரம் டொலரை நாளாந்தம் ஈட்ட வேண்டும்”
தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்; கோபுரத்துக்காக மொத்தம் 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கையின் இன்றைய நாணயப் பெறுமதியில் 3803 கோடி ரூபா) செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“தாமரை கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு வழங்குவதற்காக 4.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது. மேலும் 56 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவர்களுக்கு வழங்கி வைக்க வேண்டும். இது ஐந்தாண்டுகளில் நிறைவுசெய்யப்பட வேண்டும்’ என்றார்.
“எனவே தாமரை கோபுரம் சித்தரிப்பது ஒரு இருண்ட படம் மட்டுமே” என்று அவர் மேலும் தெரிவித்தார்.