நாட்டிலுள்ள மாகாண சபைகள், சட்ட விரோதமாக இயங்குகின்றன: மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

🕔 September 25, 2022

நாட்டிலுள்ள மாகாண சபைகள் தற்போது சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது – முழுவதும் சட்டவிரோத செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார்.

எந்தவொரு அரச நிறுவனத்தையும் மக்கள் பிரதிநிதி ஒருவர் இல்லாமல் கொண்டு செல்வது குற்றமாகும். உள்ளூராட்சி மன்றங்கள், தேர்தல் இன்றி ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களினால் செயற்படுத்தப்படுவது, பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறலாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த காலங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவை மக்கள் தூற்றினர். எனினும், நீதிமன்றுக்குச் சென்றதும், நாடாளுமன்றினால் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பழைய முறையில் அல்லது புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாண சபை முறைமையை கொண்டு செல்ல வேண்டுமாயின் – மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்