மஹிந்தவின் மைத்துனருக்கு 50 லட்சம் ரூபா சம்பளம்; நாமலின் அலுவலகப் பெண்ணுக்கு, ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிலும் வேலை: நாடாளுமன்றில் அம்பலம்

🕔 September 22, 2022

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் – ஸ்ரீ லங்கன் எயார் லைன்சில் பணிப்பாளராக இருந்த போது, 50 இலட்சம் ரூபாய் வேதனம் வழங்கப்பட்டது என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் இன்று (22) தெரிவித்தார்.

இதற்கு பின்னர் வந்த ஒருவருக்கு 100 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து இளைப்பாரிய ராணுவ அதிகாரி ஒருவர் செயற்படு (Acting) பணிப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு 30 லட்சம் ரூபாய் கொடுப்பனவாக செலுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்சவின் காரியாலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் ஸ்ரீ லங்கன் எயார் லைன்சில் பணிப்பெண்ணாகவும், பணியாற்றி வருமானங்களை திரட்டி வந்தார் எனவும் அவர் இதன்போது கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்; “நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். போராட்டங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்து செயற்பட்டனர்.

மோசடிகளுக்கு எதிராக போராட்டங்கள் மூலமே தீர்வுகளை காணமுடியும்.

கசிப்பு விற்பனை செய்தாவது – நாடாளுமன்றத்திற்குள் வரும் பலர் பொது மக்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை.

அத்துடன், இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

அவ்வாறான நிலையிலேயே நாட்டில் மோசடியற்ற நிலையை கொண்டுவர முடியும்.

தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் அவசரமாக கொண்டுவரகூடிய விடயமல்ல. அது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டியது.

எனினும் தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும்” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் பாரிய பங்கை கொண்டிருக்கின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டளவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்சில் மலசலகூடம் ஒன்றை நிர்மாணிக்க 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனினும் அது நல்லாட்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.

600 கோடி ரூபாய் செலவில் ஒரு மலசலகூடம் நிர்மாணிக்கப்படுமாக இருந்தால், அதில் தங்கத்தினாலான உதிரிப்பாகங்களே பொருத்தப்பட்டிருக்க வேண்டும்” என சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்