மஹிந்தவை வெற்றிபெறச் செய்வதற்காக, அரச ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தியதாக, அமைச்சர் திஸாநாயக்க ஒப்புதல்
மஹிந்த ராஜபக்ஷவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்யவற்காக, அரச ஊடகங்களையும் அரசாங்கத்தையும் அதிகளவில் பயன்படுத்தியதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், தமது கட்சி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
எதுஎவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த போதும் கட்சியை விட்டுச் செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதன் பின்னர், ஜனாதிபதிக்கான செலவு பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும், வௌிநாட்டு பயணங்களுக்காக ஜனாதிபதியுடன் செல்லும் குழுவினர் குறைக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.