01 லட்சம் கோடி ரூபா பணம் அச்சிட தீர்மானம்: பிரதமர் தகவல்

🕔 May 26, 2022

நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்துள்ள இந்த தருணத்தில், மேலும் பணத்தை அச்சிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி, மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராய்டர்ஸ் செய்திக்கு தெரிவித்துள்ளார்.

”எங்களுக்கு ஒரு ரூபாய் வருமானம் கூட இல்லை. நாங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை மேலும் அச்சிடுகிறோம்” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கமானது 40 வீதத்தை எட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

விலையேற்றத்தினால் போராட்டங்களை நடத்தி வரும் மக்களுக்கு இது மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் 21.5 வீதமாக காணப்பட்ட பணவீக்கம், ஏப்ரல் மாதத்தல் 33.8 வீதமாக உயர்வடைந்துள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை அதிகரித்ததால், அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெரும் அளவில் அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட – புதிய நிதி அமைச்சரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதேவேளை, எதிர்வரும் 06 வார காலத்துக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்